பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்ப மேளாவில் நாடு முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். நேரில் செல்ல முடியாத பக்தர்களுக்காக, அவர்களது போட்டோவை திரிவேணி சங்கமத்தில் மூழ்க வைத்து, அதற்கு ஒரு கட்டணம் வசூலிப்பதும் நடக்கிறது.
இந்நிலையில், பெண் ஒருவர் புனித நீராடும்போது, மொபைல் போனை திரிவேணி சங்கமத்தில் மூழ்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்தப் பெண், தனது கணவரிடம் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கிறார். பேசியபடியே தனது மொபைலை தண்ணீரில் முக்கி எடுக்கிறார்.
ஷில்பா சவுகான் என்ற அந்த பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது கணவர் திரையில் தெரியும்படி வைத்து, தனது மொபைலை தண்ணீரில் மூழ்கடிக்கிறார். இது, கணவர் நேரில் வந்து புனித நீராடியதற்கு சமம் என்கிறார் அவர்.
இந்த வீடியோ இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் ஒருவர் கூறும்போது, "இதுபோன்ற செயல்களால் நேரில் வந்து புனிதக் குளியல் செய்தது வீண் என்று அர்த்தமாகி விடுகிறது” என்றார். மற்றொருவர் கூறும்போது, “இந்த உலகில் முட்டாள்களுக்கு பஞ்சம் இல்லை என்று தெரிகிறது” என்றார்.
மற்றொரு பயனாளர், “புனித நீராடல் செய்துள்ளதால் உங்கள் கணவரின் ஆடைகள் நனைந்திருக்கும். அவரது ஆடையை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.