இந்தி திணிப்பை நிரூபித்தால் 99 லட்சம் ரூபாய் பரிசு.. தமிழக பாஜக அறிவிப்பு

மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருப்பதாக நிரூபித்தால் 99 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
திருப்பூரில், மோடி அரசின் மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால் 99 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும், முதல் மொழி தமிழ், இரண்டாம் மொழி ஆங்கிலம், மூன்றாம் மொழி மாணவர்களின் விருப்பத் தேர்வு என்றுதான் உள்ளது என்றும், ஹிந்தி திணிப்பு எந்த இடத்திலும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
"திமுக அமைச்சர் மகனுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை எளியவர்களின் மகனுக்கு கிடைக்கக் கூடாதா? சிபிஎஸ்இ பள்ளிகளில் கிடைக்கும் கல்வி அரசு பள்ளி மாணவனுக்கு கிடைக்கக் கூடாதா?" என்றும் அந்த போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Edited by Siva