கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான பெலிக்ஸ் என்பவர் தனது நிலத்தில் தர்பூசணி பயிரிட்டு இருந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் தர்பூசணியை பறித்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பெலிக்ஸ் கடுமையாக கோபம் கொண்டு, அந்த சிறுமியைப் பிடித்து தூக்கிச் சென்று தாக்கியதோடு, பாலியல் ரீதியாகவும் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால், சிறுமி காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் குறித்து தாயிடம் கூறிய சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரின் தாய் உடனடியாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சிறுமி மீது நடத்தப்பட்ட அத்துமீறல் குறித்து மருத்துவ பரிசோதனை செய்யுமாறு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்வதற்காக போலீசார் பெலிக்ஸிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.