காஸ் கசிந்து சுவிட்சை போட்டதால் பயங்கர தீவிபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!
Dinamaalai March 12, 2025 04:48 PM

சென்னை கோவிலம்பாக்கத்தில் திடீரென காஸ் கசிந்து  தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.   வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், காந்திநகர் 15வது தெருவில் வசித்து வருபவர் 75 வயது  முனுசாமி .  இவரது மனைவி 70 வயது ராணி ,  மகள் 45 வயது சாந்தி , மருமகன் 48 வயது ரகு , பேரன் 27 வயது அரிக்குமார். இதில் மார்ச் 4ம் தேதி  காலை மருமகன் ரகு கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது நான்கு பேர் மட்டும் தூங்கி கொண்டிருந்தனர்.


ஏற்கனவே  காஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியிருந்தது.  இதனை பற்றி அறியாமல் ராணி ஸ்விட்ச்சை ஆன் செய்துள்ளார். உடனே வீடு முழுவதும் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் ராணி மற்றும் வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த முனுசாமி, சாந்தி, அரிக்குமார் ஆகியோர் மீது தீபற்றியது. இதனால் பலத்த தீக்காயம் அடைந்து வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிக்கு பிறகு  மேல் சிகிச்சைகாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காஸ் கசிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், தடயவியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வீட்டில் இருந்து ரெகுலேட்டர் டியூப், மற்றும் பால் குண்டா, எரிந்த மாதிரி கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து  மேடவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனுசாமி, சாந்தி, அரிக்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.  போலீசார் மூன்று உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராணி தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.