தமிழகம் முழுவதும் மாநில வழி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் நேற்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் பணியில் இருந்துள்ளார்.
அவர் தேர்வு எழுதியவர்களை கண்காணிக்காமல் லேப்டாப்பை திறந்து வைத்து படம் பார்த்தபடி வேறு வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென பறக்கும் படை துணை கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் ஆய்விற்காக வந்துள்ளனர். தேர்வு நடக்கும் நேரத்தில் மாணவர்களை கண்காணிக்காமல், லேப்டாப் பார்த்த கண்காணிப்பாளரை அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
அத்துடன் அவருடைய லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் தேர்வு மையத்திலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார். அந்த தேர்வு மையத்திற்கு மாற்று கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். லேப்டாப் பார்த்த ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.