வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஸ்டேட்மென்ட்டை வங்கியின் நிர்வாகம் ஈமெயில் மூலம் அனுப்பும். இதன் மூலம், ஒரு மாதத்தில் எவ்வளவு வரவு வந்துள்ளது, எவ்வளவு செலவாகியுள்ளது, வங்கியில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் இந்த ஸ்டேட்மெண்ட்டை ஒவ்வொரு மாதமும் அனுப்பி வருகின்றன. அது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதங்களுக்கு இடையில் ஸ்டேட்மெண்ட் தேவையானாலும், அதற்கான வசதியையும் வங்கிகள் தங்களுடைய இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளில் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், இதே போன்ற ஒரு வசதியை Paytm நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி யுபிஐ பயன்பாட்டு செயலியான Paytm ஏராளமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய செலவுகளை கண்காணிக்க இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வசதி Paytm செயலியில் வழங்கப்பட்டுள்ளதுடன், ஸ்டேட்மெண்ட் தேவைப்படும் பயனர்கள் கோரிக்கை விடுத்தால், உடனடியாக PDF வடிவில் ஸ்டேட்மெண்ட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர் பேடிஎம் மூலம் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டு, அனாவசிய செலவுகளை குறைத்து, அத்தியாவசிய செலவுகளை அதிகரிக்கலாம்.
யுபிஐ துறையில் முதல் முறையாக Paytm இந்த வசதியை கொண்டு வந்துள்ளதை அடுத்து, Paytm பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் இந்த ஸ்டேட்மெண்ட்டை டவுன்லோட் செய்து தங்களுடைய வரவு-செலவு கணக்கை பார்த்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் தங்களுடைய செலவுகளையும் வரவுகளையும் தெரிந்து கொண்டால் தான் அடுத்த மாதத்திற்கான திட்டமிடல் சரியாக இருக்கும். இதன் காரணமாக, Paytm அளித்துள்ள இந்த வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.