ஆந்திர பிரதேச மாநிலத்தில் MRI ஸ்கேன் செய்யும் போது 60 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தில் கோடேஸ்வர ராவு-துலசம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் துலசம்மா டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததோடு இதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பேஸ் மேக்கர் பொருத்தி இருந்தார்.
இந்நிலையில் துலசம்மாவுக்கு மருத்துவர்கள் MRI பரிசோதனை செய்ய ஆலோசனை வழங்கியிருந்தனர். இதற்காக அவருடைய கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பரிசோதனை நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய மனைவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட தொடங்கியதாக கோடேஸ்வர ராவு தெரிவித்தார். ஆனால் தொழில்நுட்ப வல்லுனர் அதனை கவனிக்காமலும், முறையான பதில் வழங்காமலும் அலட்சியப்படுத்தி உள்ளார்.
அதோடு ஸ்கேன் நேரத்தில் அவர் அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கணவர் அவருடைய கால்களை பிடிக்குமாறு தொழில்நுட்ப வல்லுனர் கூறியுள்ளார். அப்போது துலசம்மா சிரமப்படுகிறார் என்று கணவர் கூறியபோதும் தொழில்நுட்ப வல்லுனர் அதை கவனிக்கவில்லை. பரிசோதனை முடிந்த பிறகு அவருடைய மனைவி உயிரிழந்ததை பார்த்து தொழில் நுட்ப வல்லுனர் அதிர்ச்சி அடைந்ததாக கோடேஸ்வர ராவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் துலசம்மாவின் பேஸ்மேக்கர் மற்றும் டயாலிசிஸ் பிளாக் இருப்பதை சரியாக கவனிக்காதது தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும், தனது மனைவி சிரமப்படுவதை தொழில்நுட்ப வல்லுனரிடம் கூறியும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கோடேஸ்வர ராவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்து மருத்துவமனை அலட்சியமாக செயல்பட்டதால் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.