ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். 43 வயதான இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். அவரால் முழு அளவில் முழு திறனோடு பேட்டிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகமானது எப்பொழுதும் போல இருக்கிறது. அவரும் எப்போதும் போல அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக தற்போது ஒரு சம்பவத்தை செய்துள்ளார். கடந்த வருடம் தோனிக்கு முழங்காலில் ஒரு பிரச்சினை இருந்தது. அதனால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை. அவரால் அதிக ரன்கள் ஓட முடியவில்லை என்பதால் சிக்ஸர் அடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.
இந்த முறை கிட்டத்தட்ட அதே போன்று அதிரடி ஆட்டத்தை காட்டுவார் என்று கூறப்படுகிறது. அவரால் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்ய முடியாது. ஆனால் இரண்டு ஓவர்கள் நின்றாலும் முடிந்தவரை சிக்ஸரகளை அடிப்பார். அதற்கான வலைப் பயிற்சியில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறார். தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்தி வரும் பயிற்சி முகாமில் தோனி பங்கேற்றுள்ளார். அதில் அவருக்கு வீசப்பட்ட ஷார்ட் பந்து ஒன்றை தூக்கி சிக்ஸ் அடித்துள்ளார். அதை சிஎஸ்கே அணியின் ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வேகமாக வைரல் ஆகி வருகிறது. இதே போல ஆடினால் நிச்சயமாக எதிரணிகள் அவருக்கு எதிராக மட்டுமே தனியாக வியூகத்தை வகுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.