திமுகவின் ஊழல் குறித்து "விஜய் கூறியது சரிதான். தி.மு.க.வின் ஊழல் குறித்து புத்தகம் எழுதுவது மட்டுமல்ல, திரைப்படமே கூட எடுக்கலாம்.'' என பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பா த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "டாஸ்மாக் மோசடி குறித்து அமலாக்கத்துறை பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளை பார்த்தால், தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவுக்கு இருக்கிறது" என்று விஜய் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை சாலிகிராமத்தில்தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"விஜய் கூறியது சரிதான். தி.மு.க.வின் ஊழல் குறித்து புத்தகம் எழுதுவது மட்டுமல்ல, திரைப்படமே கூட எடுக்கலாம். தமிழக பட்ஜெட்டில் இருப்பதை இருக்கிறது என்று சொல்கிறோம், இல்லாததை இல்லை என்று சொல்கிறோம்.
மற்றபடி ரூ போட்ட பட்ஜெட்க்கெல்லாம் ஓ போட்டு வியப்பில் வாழ்த்த முடியாது. நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.