நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்பு அண்ணா காலனியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் பன்னீர்செல்வம்(24). இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் 18 வயது நிரம்பாத சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் மூன்று ஆண்டுகள் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
அவர் காதலித்து திருமணம் செய்த சிறுமிக்கு 18 வயது தாண்டிவிட்டது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த பன்னீர்செல்வம் கடந்த 7-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பன்னீர்செல்வம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.