திமுக காவல்நிலையங்களை பூட்டு போட்டு பூட்டிவிட்டதா? தினமும் தொடரும் படுகொலைகள்... அண்ணாமலை காட்டம்!
Dinamaalai March 20, 2025 12:48 PM


 
தமிழகத்தில்  சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல்  அவரது மனைவி கண் முன்னே வெட்டிக்கொலை செய்துள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பட்ட பகலில் இப்படியா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்ப வைத்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு  சதீஷ், பூபாலன், சரவணன் ஆகிய மூன்று பேரும் காலில் சுடப்பட்டநிலையில் பிடிபட்டனர். கார்த்திகேயன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.  


 


சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீதம் உள்ள குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து தொடரும் கொலை சம்பவங்கள் குறித்து  அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை   “ ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.


திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?” எனவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.