திருப்பதி திருமலை ஏழுமலையான் தேவஸ்தானத்தில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு 'திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்,' என, கடந்தாண்டு நவம்பரில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது பேரனின் பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் திருமலை பாலாஜி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றுள்ளார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
'நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒத்துழைப்பு கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இக்கோயிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் எனவும், ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தவர்கள் பணியாற்றி வந்தால் அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழுமலையான் வெங்கடேஸ்வர சுவாமியும் அதன் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், கோவிலில் புனிதமற்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களின் தலையாய கடமை என்று வலியுறுத்தி உள்ளார்.