நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சூழலில், நாமக்கல்லில் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பாட்டிலிங் பிளான்டுகளுக்கு துறைமுகங்களில் இருந்து டேங்கர்களில் எரிவாயுவை எடுத்து வரும் பணியை தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 4,000 லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுநர் அல்லது கிளீனர்கள் இல்லாதபட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம், ஏதேனும் சிறு விபத்து ஏற்பட்டால் அந்த லாரிகள் 3 ஆண்டுகளுக்கு டெண்டரில் பங்கேற்க முடியாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தென்மண்டல அளவில் இன்று (27.03.25) வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட முன் வந்துள்ளன. வருவாய் இழப்பை காட்டிலும் வேலைவாய்ப்பு பறி போகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் .
இவ்வாறு தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்தார்.
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கூறினார்.