தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் முடிங்கி கிடக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். எனவே பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வானது முன்கூட்டியே தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைடுத்து பள்ளியில் ஆண்டு இறுதி தேர்வானது முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை திருத்திய புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு வருகிற 21ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே 17ஆம் தேதியே விடுமுறை விடப்படவுள்ளது.