18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 97 ரன்கள் வரை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டநாயகன் விருதினை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்றார்.
இந்நிலையில் தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதிலாக பேட்டிங் என்று சொல்லலாம் என ரபாடா ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, ஒவ்வொரு மைதானத்திலும் போட்டியை சுவாரசியமாக கொண்டு செய்வதற்காக பிளாட் பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இனிமேல் இந்த போட்டியை கிரிக்கெட் என்று சொல்லாதீர்கள். பேட்டிங் என்று சொன்னால் அது மிக சரியாக இருக்கும். எனக்கு சில சாதனைகள் முறியடிக்கப்படுவது எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் பேட்டிங் மற்றும் பவுலிங் இடையே ஒரு சமநிலை என்பது இருக்க வேண்டும். மேலும் அது இல்லை என்று ஆதங்கத்தோடு கூறினார்.