தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் குற்றத்தில், போக்ஸோ வழக்கில் தொடர்புடையவர் தலைமறைவான நிலையில் அவரது ஜாமீன்தாரர்கள் இருவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் மணிவண்ணன்(27). இவர், போக்ஸோ வழக்கில் மாசார்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு, அவரது உறவினர்கள் இருவர் ஜாமீன் வழங்கியிருந்தனர்.
இதையடுத்து பிணையில் வந்த மணிவண்ணன், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாசார்பட்டி போலீசார் தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் நீதிபதி சுரேஷ், ஜாமீன்தாரர்கள் 2 பேருக்கும் தலா 15 நாள்கள் சிறை தண்டனை அல்லது தலா ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இருவரும் தலா ரூ.10,000 அபராதம் செலுத்தினர்.