தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கடை அருகே பாட்டியுடன் நின்று கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை பைக் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மரியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் த.ராபின்ஸ்டன்(25). இவருக்கு மவின் அந்தோணி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் இரவில் ராபின்ஸ்டனின் தாய் ஜூலியட், தனது வீட்டின் எதிரே உள்ள கடை முன் பேரன் மவின் அந்தோணியை கையில் பிடித்தவாறு நின்று கொண்டிருந்த போது திசையன்விளையில் இருந்து வந்த உடன்குடி சோமநாதபுரத்தைச் சேர்ந்த அ.பிரவின்(24) என்பவரது பைக் இருவர் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மவின் அந்தோணி, ஜூலியட் இருவரும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தை மவின் அந்தோணி இறந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.