‘டெக் ஜப்பான்’ நிறுவனத்தின் சார்பில் டேலண்டி (Talendy) எனும் நிறுவத்தை இந்தியாவில் தொடங்கிய நவோடாகா நிஷியாமா, கடந்த வருடம் வெறும் ஒரு சூட்கேஸுடன் இந்தியா வந்தார். 2024ம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஜப்பானில் உள்ள டோக்கியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மார்ச் 26ஆம் தேதி அதிகாலை பெங்களூருவில் தனது வாழ்க்கையை மாற்றும் பயணத்தை தொடங்கினார். லிங்க்ட்இனில் அவர் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“ஒரு வருடம் முன் நான் இந்தியா வந்தேன், என்னிடம் ஒரு கனவும் ஒரு சூட்கேஸும் மட்டுமே இருந்தது,” என கூறிய நிஷியாமா, தன்னை டொயோட்டா அல்லது சுசுகி நிறுவன ஊழியரென எண்ணும் மக்கள் மத்தியில், “நான் டேலண்டி எனும் நிறுவனத்தை நடத்துகிறேன்” என கூறும்போது ஏற்பட்ட குழப்பங்களை நினைவுகூர்ந்தார்.
“இந்தியாவில் நான் கண்ட மக்களின் உற்சாகமும், சிக்கல்களுக்கிடையிலும் புதுமையான வழிகளில் முன்னேறும் ஆற்றலும் எனக்கு புதிய உத்வேகமாக அமைந்தது. இங்கே வாழ்க்கை திட்டமிட்டபடி போகவில்லை. ஆனால் அதற்கேற்ப தானாகவே மாற்றங்களை ஏற்றுக்கொள்வது, கைவினைப் போல் வந்துவிட்டது,” என கூறிய நிஷியாமா, ‘Perfect is the enemy of progress’ என்ற வார்த்தையின் உண்மையை இந்தியாவில் தினமும் உணர்கிறேன் என்றும் தெரிவித்தார்.
இந்திய இளைஞர்களின் சக்தியும், முனைப்பும் தான் இன்னும் தொடர்ந்தும் முன்னே செல்ல என்னை தூண்டுகிறது என நிஷியாமா கூறினார். “நான் இன்னும் கற்றுக்கொண்டுகொண்டிருக்கிறேன். ஆனால் இந்தியாவில் சந்தித்த மக்கள் – குறிப்பாக இளைய தலைமுறை – எனக்கு எதிர்காலத்தில் சிறந்த ஒன்றை உருவாக்கும் நம்பிக்கையை தருகிறார்கள்” என அவர் பதிவு செய்துள்ளார்.