வேண்டிய வரம் தரும் சிவகிரி முருகன் கோவில்... 1500 ஆண்டுகள் பழமையானது!
Dinamaalai March 31, 2025 01:48 AM

பாலசுப்பிரமணியர் திருக்கோவில் தென்காசி மாவட்டத்தின் சிவகிரி என்ற ஊரில், ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. 

1500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த கோவிலில், மூலவராக பாலசுப்பிரமணியர் வீற்றிருக்கிறார், உற்சவர் முத்துக்குமாரர் என அழைக்கப்படுகிறார். இத்திருக்கோவில் தீர்த்தமாக சரவணப் பொய்கை உள்ளது. 

ஏற்கனவே, அகத்திய முனிவர் தவம் செய்த இந்த மலைப்பகுதியில், முருகப்பெருமான் அவருக்கு தரிசனம் அளித்து, அவரது விருப்பப்படி இங்கு வாசம் செய்ததாக ஐதிகம். இதனை தொடர்ந்து, இந்த மலையில் ஆலயம் கட்டப்பட்டது. முருகன் பாலகராக காட்சி தருவதால், இவரை 'பாலசுப்பிரமணியர்' என அழைக்கின்றனர். 

பக்தர்கள் கிரக தோஷங்களுக்காக இங்கு வழிபாடு செய்து, பால் அபிஷேகம் செய்கின்றனர். மேலும், முருகப்பெருமான் தனது ஜடாமுடியை கிரீடமாக சுருட்டிய வடிவத்தில் காட்சி தருவது, இத்திருக்கோவிலின் சிறப்பு.

 சக்தி மலை என அழைக்கப்படும் இம்மலையில், பல்வேறு தேவ சன்னிதிகள் உள்ளன. பங்குனி பிரம்மோற்சவம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.