நாடு முழுவதும் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 31ம் தேதிக்குள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், இசை, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசுத் தினத்தன்று இவ்விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், 2026ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://awards.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஜூலை 31ம் தேதி விண்ணப்பிக்க, பரிந்துரை செய்ய கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள். விருதுகள் தொடர்பான விதிகள் இணையதளத்தில் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. 1954ம் ஆண்டில் இருந்து பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.