பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 44 திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதன்படி 130 குடிநீர் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரு அரசு கல்லூரி உட்பட பல திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். தேசிய நெடுஞ்சாலை-31 ல் ரூ. 980 கோடிக்கு மேல் மதிப்புள்ள நெடுஞ்சாலை சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “இந்தியாவுக்கு சேவை செய்வதில் எங்கள் வழிகாட்டும் மந்திரம் எப்போதும் ‘எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி’ என்பதே. இந்த உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்துக்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள், நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டமே கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காகவே, இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே அரசியல் விளையாட்டுகளை விளையாடும் இவர்களின் கொள்கை ‘குடும்பத்துக்கே ஆதரவு குடும்பத்துக்கே வளர்ச்சி’ என்பதாகும்.
கடந்த காலங்களில் பூர்வாஞ்சலில் சுகாதார வசதிகள் இல்லை. இன்று காசி சுகாதார தலைநகராக மாறி வருகிறது. இன்று இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டு முன்னேறி வருகிறது. நமது காசி இதற்கு சிறந்த முன்மாதிரியாக மாறி வருகிறது. இந்தியாவின் ஆன்மா அதன் பன்முகத்தன்மையில் வாழ்கிறது, காசி அதன் மிக அழகான படம். 2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்ய எனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.