ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்தவண்ணம் இருக்கிறது.
இந்திய அரசும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், பாகிஸ்தான் மீது இந்தக் குற்றச்சாட்டையும் மத்திய அரசு வைக்கவில்லை.
ஆனாலும், `சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம். பாகிஸ்தானியர்கள் உடனடியாக இங்கிருந்து வெளியேற உத்தரவு. பாகிஸ்தானியர்களுக்கு அனைத்து விதமான விசாக்களும் ரத்து' என அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கட்டமைக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இத்தகைய நடவடிக்கைகளை மோடி அரசு முன்னெடுத்திருக்கிறது.
இந்திய அரசின் இத்தகைய செயலுக்கு, பாகிஸ்தானும் எதிர்வினையாற்றுவதாகத் தெரிவித்திருக்கிறது. அதேவேளையில், நாட்டில் ஆங்காங்கே பா.ஜ.க தலைவர்கள், இந்த சம்பவத்தை வைத்து இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிந்து நதிநீரை நிறுத்தினால் அதை எங்கு தேக்குவீர்கள் என மத்திய அரசுக்கு AIMIM கட்சித் தலைவரும், எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி கேள்வியெழுப்பியிருக்கிறார்.
டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி, "சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது மிகவும் நல்ல முடிவுதான். ஆனால், நீரை நாம் எங்கு தேக்கி வைக்கப்போகிறோம்.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு முடிவையும் நாங்கள் ஆதரிப்போம். இது அரசியல் பிரச்னை அல்ல.
பயங்கரவாத குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, நாட்டுக்கெதிராக நடக்கும் குழுக்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். பாகிஸ்தானுக்கெதிராக தற்காப்புக்காக விமானம் மற்றும் கடற்படை முற்றுகை நடத்தவும், ஆயுத விற்பனைக்குத் தடை விதிக்கவும் சர்வதேச சட்டம் அனுமதிக்கிறது" என்று கூறினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய பாதுகாப்புப் படைமீது ஒவைசி, "சம்பவ நடந்த இடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை? விரைவு எதிர்வினைக் குழு அங்கு செல்ல ஏன் ஒரு மணி நேரம் ஆனது?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK