4 வயது முதல் சினிமாவில் இருப்பவர் கமல்ஹாசன். எனவே, இவருக்கு சினிமாவில் எல்லாமே அத்துப்படி. சினிமாவில் பல வருட அனுபவங்கள் அவருக்கு பல புதிய முயற்சிகளுக்கும், தைரியமான முடிவுகளை எடுப்பதற்கும் துணையாக இருக்கிறது. சகலகலா வல்லவன், கலைஞானி, ஆண்டவர், உலக நாயகன் என இவருக்கு பல பட்டங்களும் வந்தது. இப்போது விண்வெளி நாயகன் ஆகிவிட்டார்.
தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், கதை விஷயத்திலும் உலக சினிமா தரத்திற்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை கமலுக்கு எப்போதும் உண்டு. அதற்காக தன்னால் முடிந்தவரை என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வது வருகிறார். தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் நடித்தார்.
இப்போதுள்ள இயக்குனர்களுக்கும் அது ஆச்சர்யமாகவே இருக்கிறது. திரைத்துறையில் பல புதிய தொழில்நுட்ப விஷயங்களை கொண்டு வந்தவர் கமல்தான். ஒளிப்பதிவு, எடிட்டிங், மேக்கப் போன்ற விஷயங்களில் கமல் முன்னோடியாக இருந்திருக்கிறார். முகத்தை மாற்றும் மேக்கப் கலையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவரே கமல்தான்.
kamal
அதேபோல், இப்போது பிரபலமாக இருக்கும் ஓடிடியை தனது விஸ்வரூபம் படத்திலேயே கொண்டுவந்தார் கமல். பணம் கட்டி வீட்டிலேயே படம் பார்க்கலாம் என அறிவித்தார். ஆனால், அதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை கைவிட்டார். ஆனால் ‘இப்போது நீங்கள் இதை தடுத்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியை உங்களால் தடுக்க முடியாது’ என சொன்னார். இப்போது எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தலும் ஓடிடி நிறுவனங்கள்தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறது.
கோலிவுட்டில் இப்போதுள்ள நடைமுறைப்படி ஒரு புதிய படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகி வருகிறது. இதை எட்டு வாரங்களாக மாற்ற வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் சொல்லி வருகிறார்கள். ஹிந்தி படங்கள் எல்லாம் 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தமிழிலும் 8 வாரங்கள் என்பதை கமல் கொண்டு வந்திருக்கிறார். அவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படம் தியேட்டரில் ரிலீஸாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகவுள்ளது. 4 வாரங்கள் என்றால் இன்னும் அதிக தொகை கொடுக்கிறோம் என ஓடிடி நிறுவனம் சொல்லியும் கமல் அதை ஏற்கவில்லை. எனக்கு வரும் லாபத்தை விட தியேட்டர் அதிபர்களுக்கு வரும் லாபமே முக்கியம் என சொல்லிவிட்டாராம்.
கமலை பார்த்து மற்ற தயாரிப்பு நிறுவனங்களும் இப்படி முடிவெடுத்தால் தியேட்டர் அதிபர்களுக்கு நல்லது!…