உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் காஷ்மீரை சேர்ந்த 2 சுடிதார் விற்பனையாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார் அட்டையை காண்பிக்க கூறினார். அதன்படி வியாபாரிகள் ஆதார் அட்டையை காண்பித்தும் தொடர்ந்து இளைஞர்கள் வியாபாரிகளை தாக்கி அந்த இடத்தில் இருந்து விரட்டினார்.
இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சுராஜ் சிங், பிரதீப் சிங் மற்றும் அபிஷேக் உனியால் ஆகிய 3 இளைஞர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறினார்கள். மேலும் அந்த இளைஞர்கள் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என உறுதியளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.