சென்னையில் இன்று மே 3ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு எவ்வாறு தயாராகுவது உட்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
இதில், ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
அதனை அடுத்து, திமுக அரசு 5வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்று இந்தியாவிற்கே ரோல் மாடலாக செயல்படுவதாக குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக அரசின் சாதனைகளை பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் – 224 பகுதிகள் – 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!” எனும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்திட தீர்மானம் நிறைவேற்றம் செயயபட்டது.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது என்ற தீர்மானம், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை கொண்டு மத்திய அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என மத்திய பாஜக அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். அவரை சட்டமன்றத்துக்கு தகுதி உள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது மாவட்ட செயலாளர்களின் கடமை கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றிக்குக் காரணம் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் . இனி அமைச்சர்கள், சென்னையில் இருப்பதை விட அவரவர் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிட வேண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.