சமீபத்தில் பயணிகள் தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் கட்டுரை போட்டி ஒன்றிற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன் நோக்கம் என்பது பயணத்தின் இனிமையான நினைவுகளை பகிர்வது.
ஆனால் அந்த கட்டுரையை இந்தியில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதன் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பதிவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வே துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு டேக் செய்துள்ளார். மேலும் இந்தி திணிப்பு என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே புதிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுத்த போதிலும் தங்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கறார் காட்டி வருகிறது.
இத்தகைய மொழி திணிப்பு மோதல் வெடித்து ஒருபுறம் சலசலப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் மறுபுறம் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் சைலண்டாக இந்தியை திணிக்கும் வேலையை செய்கிறதோ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள கட்டுரை போட்டி அறிவிப்பை ஆராய்ந்தோம். அதில், ரயில் யாத்ரா விரிதந்த் புரஸ்கார் 2025 எனப் போட்டிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 1, 2025 ஆகும். முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாவது பரிசு 8,000 ரூபாய், மூன்றாவது பரிசு 6,000 ரூபாய், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும். மேலும் வெற்றியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டிக்கான கட்டுரை 3,000 முதல் 3,500 வார்த்தைகளில் இந்தியில் மட்டும் எழுதி அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.