பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியாவில் தங்கியிருந்த 26 பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அந்நாட்டைச் சேர்ந்தவர்கள், அட்டாரி வாகா எல்லை வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிஆர்பிஎப் 41வது பட்டாலியனில் வீரராக பணிபுரியும் முனீர் அஹமது என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த மேனால் கான் என்பவரை ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்தாலும், அதிகாரிகள் முடிவு செய்வதற்கு முன்னரே அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து மேனால் கான் இந்தியா விசா பெற்று காஷ்மீரின் முனீர் அஹமதுவுடன் வசிக்க துவங்கினார். ஆனால், விசா காலம் முடிந்த பிறகும் அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை.
மத்திய அரசு உத்தரவை அடுத்து மேனால் கான் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க அட்டாரி வாகா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், காஷ்மீர் ஐகோர்ட் தடை விதித்ததால் மேனால் கான் நாடு கடத்தல் நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
இந்நிலையில், அனுமதி பெறாமல், பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த முனீஸ் அஹமது குறித்து சிஆர்பிஎப் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை செய்ய துவங்கினர். அவரது நடவடிக்கைகள் சிஆர்பிஎப் விதிகளுக்கு எதிரானது என உறுதி செய்த அதிகாரிகள் முனீஸ் அஹமதுவை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.