உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சமான்காஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடத்தின், முதல் இரு தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென எரிந்த தீ, மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது.
உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தீயானது 4வது மாடிக்கும் பரவியதால், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 4வது மாடியில் வசித்து வந்த முகமது டேனிஷ், நஷ்னீன் சாபா தம்பதியர் மற்றும் அவர்களது 3 மகள்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.