பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்... இளம்பெண் தலை துண்டித்து படுகொலை!
Dinamaalai May 06, 2025 11:48 PM

பட்டுக்கோட்டை அருகே பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2021ல் சண்முகசுந்தரம் இறந்து விட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பாலன் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் சரண்யாவின் மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார்.

அதன் பின்னர் சரண்யா கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யாவின் வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டியுள்ளனர். இதில் சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து வாட்டாத்திகோட்டை காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சரண்யா மதுரையில் வசித்து வந்த போது பாஜ கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது எந்த பொறுப்பிலும் இல்லை. என்ன காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.