ஜம்மு, பஞ்சாபில் டிரோன் தாக்குதல் மற்றும் வெடிச்சத்தம்: என்ன நிலவரம்? - நேரலை
BBC Tamil May 10, 2025 04:48 AM
Getty Images (கோப்புப்படம்)

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் இன்று (மே 9) மீண்டும் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது.

பஞ்சாபில் நடந்த டிரோன் தாக்குதலில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது

மேலும் ஜம்மு, சம்பா மற்றும் பதான்கோட்டில் டிரோன்கள் காணப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர், குப்வாராவின் கர்னாஹ் மற்றும் தங்தார், உரி மற்றூம் பூஞ்ச் பகுதிகளில் இரவு 7.20 மணிக்கு ஷெல் குண்டு தாக்குதல் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.

மேலும், ''அவந்திபுராவில் பெரியளவில் வெடிச் சத்தம் கேட்டது. எந்தப்பக்கத்திலிருந்து சத்தம் வந்தது என்பது தெரியவில்லை. தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் பொறுப்பேற்கவில்லை. காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது. உரி உள்ளிட்ட பகுதிகளின் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது'' என்றார் மஜித் ஜஹாங்கிர்.

உரி பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடி சத்தங்கள் கேட்கப்படுவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இவைபோக பதான்கோட்டில் உள்ள பிபிசி குழுவும் வெடி சத்தங்களைக் கேட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பூஞ்சின் சூரன்கோடில் உள்ள பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ், ''நேற்று இரவு பூஞ்சில் கடுமையான ஷெல் தாக்குதல் நடந்தது. அதில் ஒருவர் இறந்துள்ளார். இன்று காலையிலே மக்கள் இங்கிருந்து வெளியேறி உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர்'' என்றார்

பஞ்சாபில் உள்ள பிபிசி செய்தியாளர்கள், ஃபெரோஸ்பூரில் உள்ள உள்ளூர்வாசிகள் குறைந்தது மூன்று வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகக் கூறினர்.

ஃபெரோஸ்பூர் அரசு நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், மூன்று வெடிப்புச் சத்தங்களை தானும் கேட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பிபிசி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின், அமிர்தசரஸிலும் பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டதாகக் கூறினார்.

மேலும், '' அமிர்தசரஸின் பல பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. ஃபெரோஸ்பூரில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்ததை ஒரு காணொளி காட்டுகிறது. டிரோன் தாக்குதலால் தீப்பிடித்திருக்கலாம் என காவல்துறை கூறுகிறது.'' என்றார் அவர். இந்த டிரோன் தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது

Getty Images (கோப்புப்படம்) பாகிஸ்தான் டிரோன் தாக்குதலால் மூன்று பேர் காயம்

பஞ்சாபில் நடந்த பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஃபெரோஸ்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் சித்து ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் காயம் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பெரும்பாலான டிரோன்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஃபெரோஸ்பூர் பகுதியில் ஏவப்பட்ட பெரும்பாலான டிரோன்கள் இந்திய வான் பாதுகாப்பால் இடைமறிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் மற்றும் உத்தம்பூர், ஹரியானாவின் அம்பாலா மற்றும் பஞ்ச்குலா, பஞ்சாப்பில் ஃபெரோஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிப்பு

ஜம்முவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சைரன் சத்தங்கள் கேட்டதாகவும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளப் பதிவில், "ஜம்முவில் மின் தடை உள்ளது, நகரம் முழுவதும் சைரன் சத்தங்கள் கேட்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "நான் இருக்கும் இடத்தில் இருந்து பயங்கரமான வெடி சத்தத்தையும் குண்டு எறியும் சத்தத்தையும் கேட்க முடிகிறது. ஜம்மு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் அடுத்தச் சில மணி நேரங்களுக்கு தெருக்களில் அல்லாமல் உங்களுடைய வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ இருக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். வதந்திகளைத் தவிர்க்கவும், உறுதிபடுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம். இதை நாம் ஒன்றாக கடந்து வருவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

வியாழக்கிழமை (மே 8) இரவு சர்வதேச எல்லையில் 36 இடங்களில் 300 - 400 டிரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்தது என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால் தாங்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் கூறியிருந்தது.

'பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்தது'

இன்று (மே 9) நடந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டை இந்தியா முன் வைத்தது.

வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.

அவர் கூறிய முக்கிய கருத்துகள் என்ன?

  • பாகிஸ்தான் இந்திய எல்லையில் வான்வெளியில் பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு சர்வதேச எல்லையில் 36 இடங்களில் 300 - 400 டிரோன்களைப் பயன்படுத்தி ஊடுருவ பாகிஸ்தான் முயற்சித்தது.
  • பாகிஸ்தான் பயன்படுத்திய டிரோன்களை இந்தியா தடுத்துள்ளது, சுட்டுவீழ்த்தியுள்ளது. இதன் மிச்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முதல் கட்ட ஆய்வில் இவை துருக்கியைச் சேர்ந்த டிரோன்கள் எனத் தெரியவந்துள்ளன.
  • இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து ஆயுதம் ஏந்திய டிரோன்கள் பாகிஸ்தானின் நான்கு வான்வழி பாதுகாப்பு இடங்களைக் குறிவைத்து அனுப்பப்பட்டன. அதில் ஒரு டிரோன் பாகிஸ்தானில் இலக்கை அழித்தது.
  • பாகிஸ்தான் இந்தியாவில் தம்தார், உரி, பூஞ்ச், மேந்தர், ராஜௌரி, அக்னூர் மற்றும் உதம்பூர் போன்ற இடங்களில் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சில இழப்புகளும் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டன. இந்தியாவின் பதில் தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவத்திலும் நிறைய இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • ஏவுகணைத் தாக்குதலின்போதும் ஷெல் தாக்குதலின்போதும் பாகிஸ்தான் சிவில் விமானங்களுக்கு வான்வெளியை மூடவில்லை. பொதுமக்கள் பயணிக்கும் சிவில் விமானங்களை கேடயமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இது சிவில் விமானங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை.
  • இந்திய விமான நிலையங்களை மூடியதால் நம் எல்லையின் எந்த விதமான விமானங்களின் நடமாட்டமும் இல்லை. ஆனால் பாகிஸ்தான் எல்லையில் கராச்சி-லாகூர் வழித்தடத்தில் சிவில் விமானங்கள் பறந்தன. இந்திய விமானப்படை மிகவும் கட்டுப்பாட்டுடன் பதிலடி கொடுத்துள்ளன.
PIB இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில்

  • இந்தியாவின் நகரங்கள், குடியிருப்பு பகுதிகள், ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் குறிவைத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு தகுந்த முறையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்திய பாதுகாப்பு படைகள் தேவையான மற்றும் பொறுப்பான அளவில் பதிலளித்துள்ளன.
  • பாகிஸ்தான் மதத் தலங்களைக் குறிவைக்கவில்லை எனத் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா பாகிஸ்தானால் தாக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக இந்தியா தனது சொந்த நகரங்களைக் குறிவைத்து பழியை பாகிஸ்தான் மீது போடுவதாக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. அதே போல் பாகிஸ்தானின் வழிபாட்டு தலங்களை இந்தியா குறிவைத்ததாகவும் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது.
  • பாகிஸ்தான் குருத்வாரா, கோவில்கள், தேவாலயம் என அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்கியது. தேவாலயம் மீதான பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலரும் துர்திருஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர் என்றார்
பாகிஸ்தான் அதிக இழப்புகளைச் சந்திக்கும் - ஒமர் அப்துல்லா Getty Images ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிற நிலையில் பாகிஸ்தான் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா. மேலும் அவர் பாகிஸ்தான் அதன் துப்பாக்கிகளை அமைதியாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

"பொதுமக்களை குறிவைத்தது, ஜம்மு நகரின் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தியது தான் அவர்கள் (பாகிஸ்தான்) செய்த மிகப்பெரிய விஷயம். 1971 யுத்தத்திற்குப் பிறகு ஜம்மு நகரம் இந்த அளவுக்கு குறிவைக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை" என்றார் ஒமர் அப்துல்லா.

"ஆனால் அனைத்து பெருமைகளும் நமது பாதுகாப்பு படைகளையே சேரும். அவர்கள் அனைத்து டிரோன்களையும் சுட்டுவீழ்த்தினர், ஒரு டிரோன் கூட அதன் இலக்கை அடையவில்லை. அவர்கள் அனந்த்நாக்கில் உள்ள வெடிமருந்து கிடங்கையும் குறிவைத்தனர். ஆனால் அதிலும் தோற்றனர்" என்றார்.

இந்த சூழ்நிலையை நாம் உருவாக்கவில்லை எனக் கூறியவர், "பஹல்காமில் நம் மக்கள் தாக்கப்பட்டனர், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு நாம் பதில் கொடுத்தாக வேண்டும். பாகிஸ்தான் இதை மேலும் அதிகரிக்கப் பார்க்கிறது. இதில் அதற்கு எந்தப் பலனும் இல்லை எந்த வெற்றியும் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் தங்களின் துப்பாக்கிகளை அமைதியாக்குவது சிறந்தது. நேற்று நடந்தவற்றை வைத்து பார்த்தால் அவர்கள் பக்கத்தில் இருந்து மோசமாக்கப் பார்க்கிறார்கள். அத்தகைய சூழலில் அவர்களுக்கு (பாகிஸ்தானுக்கு) தான் அதிக இழப்பு நேரும்" என்றார்.

வருகின்ற நாட்களில் புதிய பங்கர்கள் தேவைப்படும் - மனோஜ் சின்ஹா ANI ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு காஷ்மீரில் இனி வருகின்ற நாட்களில் புதிய பதுங்கு குழிகள் தேவைப்படும் என ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். உரியில் உள்ள சூழ்நிலையை ஆய்வு செய்த பிறகு இந்தக் கருத்தை தெரிவித்தார்.

இந்திய ராணுவம் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது எனக் கூறிய அவர் நம் ராணுவத்தின் உறுதி மிக அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "எல்லையில் பாதிப்புக்கு உள்ளான கிராமத்திற்கு நான் சென்றேன். காயமடைந்தவர்க்ள் உயிரிழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மதிப்பிடப்பட்டு அவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படும். புதிய பதுங்கு குழிகள் தேவைப்படுகின்றன, அவையும் வருகின்ற நாட்களில் கட்டப்படும்" என்றார்.

டிரோன் தடை உட்பட இந்தியாவின் எல்லையோர மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் Getty Images கோப்புப்படம்

சண்டிகரில் உள்ள அனைத்து கடைகளும் வெள்ளி இரவு 7 மணி உடன் அடைக்கப்பட வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எக்ஸ் வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் மருந்தகங்களுக்குப் பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் பட்டாசுகள் மற்றும் டிரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

"குஜராத்தில் எந்த நிகழ்ச்சி மற்றும் நிகழ்விலும் பட்டாசுகள் அல்லது டிரோன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்" என எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் ராஜஸ்தானின் பார்மரிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்மர் மாவட்டத்தில் டிரோன் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிரோன் வைத்திருப்பவர்கள் அனைவரும் இன்று உள்ளூர் காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் பார்மர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்மரில் பட்டாசுகளைப் பயன்படுத்தவும் இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம் Getty Images

இந்திய அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்தியாவில் 8,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக சமூக ஊடக தளமான எக்ஸ் (X) வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

இதில் டான் மற்றும் ஜியோ டிவி போன்ற பாகிஸ்தான் ஊடகக் கணக்குகளும், அந்நாட்டைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்களின் கணக்குகளும் அடங்கும்.

இது தவிர, 'தி வயர்' செய்தி ஊடகம், 'இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இணைய வழங்குநர்கள் தங்கள் வலைத்தளத்தை முடக்கியுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை அப்பட்டமான தணிக்கைச் செயல்' என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

10 இந்திய நகரங்களுக்கான விமானங்கள் ரத்து Getty Images கோப்புப் படம்

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் 10 இந்திய நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது.

'பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது' என்று இண்டிகோ ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் அதிகரித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற சம்பிரதாயங்களுக்கு வழக்கத்தை விட அதிக நேரத்தை பயணிகள் செலவிட வேண்டியிருக்கும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய பதற்றச் சூழ்நிலை காரணமாக, 10 மே 2025 23:59 மணி வரை 10 இந்தியா நகரங்களுக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்களிலிருந்து புறப்படும் மற்றும் அங்கு செல்லும் விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தானுக்கான நிதியுதவியை இன்று ஆய்வு செய்கிறது ஐ.எம்.எஃப் Getty Images

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட உள்ள அடுத்தக்கட்ட 7 பில்லியன் டாலர் நிதியுதவி பற்றி சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இன்று பரிசீலனை செய்ய உள்ள நிலையில் அதற்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐ.எம்.எஃப்-இன் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியா தன்னுடைய பார்வையை ஐ.எம்.எஃப் முன் வைக்கும் எனத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானுக்கான கடந்த கால கடனுதவிகள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்துள்ளன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த விலைவாசி மற்றும் குறைந்த வளர்ச்சியில் இருந்து மீண்டு வரும் பாகிஸ்தானுக்கு இந்த நிதியுதவி அவசியமானதாகிறது. இந்திய தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தாலும் முடிவு எடுப்பதில் அதன் செல்வாக்கு என்பது மிகவும் அளவானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா பிரதமர் நரேந்திர மோதியை வியாழன் அன்று சந்தித்துப் பேசினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தலையிட முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு Getty Images

2025 ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை உடனடியாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது

போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்ட பிசிசிஐ, தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

"கிரிக்கெட் மீது இந்தியர்களுக்கு பெரும் ஆர்வம் இருந்தாலும், தேசத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பையும் விட பெரியது எதுவுமில்லை. இந்தியாவைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங் @SpokespersonMoD

பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (மே 9) இந்திய ராணுவத்தின் உயரதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு இயக்குநரகம், "இன்று புது டெல்லியில் உள்ள தெற்கு பிளாக் அலுவலகத்தில், எல்லையில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்" என்று கூறியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ANI ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.
அணு ஆயுத போராக வெடிக்கும் ஆபத்து உள்ளதா? Getty Images

வியாழக்கிழமை சிஎன்என் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்று விவரித்தார்.

பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்தியா பதிலடி கொடுத்து வருவதாக அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 'தீவிரவாதிகள்' மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'போர்' தொடுக்கிறதா என்று வினய் குவாத்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'தீவிரவாதிகளுக்கு எதிரான போரில்' இந்தியா ஈடுபட்டுள்ளது என்று பதிலளித்தார்.

இந்தப் பதற்றம் அணு ஆயுதப் போராக தீவிரமடைவதற்கான சாத்தியம் உள்ளதா என்றும் குவாத்ராவிடம் கேட்கப்பட்டது, அதற்கு குவாத்ரா, 'இதை பாகிஸ்தானிடம் கேட்க வேண்டும்' என்றார்.

நள்ளிரவுத் தாக்குதல் பற்றி இந்திய ராணுவம் கூறியது என்ன? BBC

மே 8 நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் முழு மேற்கு எல்லையையும் தாக்கியதாக இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் (ADG PI) தெரிவித்துள்ளது.

எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகம் (ADG PI), "பாகிஸ்தான் ஆயுதப் படைகள் மே 8, 2025 நள்ளிரவில் முழு மேற்கு எல்லையிலும் டிரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் வீரர்கள் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினர்," என்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்கள் திறம்பட செயலிழக்கப்பட்டதாகவும், போர் நிறுத்த மீறல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பிபிசி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் உரி பகுதியில் பலத்த ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், எல்லைக்கு அருகிலுள்ள பொதுமக்களின் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் உள்ள பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழு மின்தடை ஏற்பட்டதாகக் கூறினார்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியது என்ன? BBC ஜம்மு முழுவதும் மின்வெட்டு அமலில் இருப்பதாக பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின் தடை அமலில் இருப்பதாகக் கூறினார்.

அப்பகுதியில் இருந்து செய்திகளை வழங்கி வரும் திவ்யா ஆர்யா, "பூஞ்ச் நகரத்தில் மின் தடை அமலில் உள்ளது. தற்போது விமான தாக்குதலின் சைரன்களை கேட்டதாகவும், குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்குள்ள எங்கள் குழுவினர் தெரிவித்தனர்," என்று கூறினார்.

மேலும், ஜம்மு நகரிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறிய அவர், இரவு 08:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

"ஜம்மு நகரின் தெற்கு நோக்கிச் சென்றால், அங்குதான் எல்லாம் தொடங்கியது" என்கிறார் திவ்யா ஆர்யா. அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வெடிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.

"ஜம்மு நகரில் சுமார் 10 வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு நகரின் ஒரு குடியிருப்பாளர் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு நகரத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. வழக்கமான தொலைபேசி இணைப்புகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் அழைப்புகள் மட்டுமே வேலை செய்கின்றன."

ANI

நேற்றிரவு முதல் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் திவ்யா ஆர்யா கூறினார்.

"ஜம்முவில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் கத்துவாவில் வாழும் மக்களிடமும் நான் பேசினேன். அங்கு குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்."

இதற்கிடையே, ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மர், பஞ்சாபின் குர்தாபூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ், பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜம்முவில் அமைந்திருக்கும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்புப் பிரிவுகள் இடைமறித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகவும் டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.

'நாங்கள் தாக்கவில்லை'- பாகிஸ்தான் அமைச்சர் மறுப்பு

ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெறும் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளார்.

"நாங்கள் இதை மறுக்கிறோம், இதுவரை எந்தத் தாக்குதலையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை" என்று பிபிசியிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறினார்.

அவரது கூற்றுப்படி, "பாகிஸ்தான் தாக்கும்போது, அது அனைவருக்கும் தெரியும். நாங்கள் தாக்கிவிட்டு பின்னர் மறுக்க மாட்டோம்".

ஜம்மு காஷ்மீரில் வெடிப்புகள் மற்றும் மின் தடை பற்றிய செய்திகள் வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் பிபிசியிடம் பேசினார்.

Getty Images மூடப்பட்ட சிவில் விமான நிலையங்கள்

பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.

அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் (SLPC) மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும் எனவும், செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.