இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வருவதால் எல்லையோர மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி படித்து வரும் மாணவர்கள், தமிழகம் திரும்புகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் தாலுகா, கொத்தமங்கலத்தை சேர்ந்த பொன் கவுசிக், ஈரோடு மாவட்டம், பெருந்துரை குருநிவாஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த முகமது ஆகியோர், பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரில் உள்ள பல்கலை ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இந்தியா & பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக, பல்கலை நிர்வாகம் மூலம் அந்த 3 மாணவர்களும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று இரவு, நள்ளிரவில் டில்லி வந்த 3 மாணவர்களும், எங்கு தங்குவது என தெரியாமல் தடுமாறினர்.
அப்போது, அவர்கள் நாமக்கல் லோக்சபா எம்.பி., மாதேஸ்வரனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். அவர் உடனடியாக தனது உதவியாளர் மூலம், டில்லியில் உள்ள தனது வீட்டுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, தங்க வைக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து, நேற்று மாணவர்களை, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
டில்லியில் நள்ளிரவில் தடுமாறிய மாணவர்களை, பாதுகாப்பாக தங்க வைத்து அனுப்பிய லோக்சபா எம்பி., மாதேஸ்வரனுக்கு மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.