கடந்த மே 7ம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ருத்ரதாண்டவமாடி வான்வழி தாக்குதல் நடத்திய போது, பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் முற்றிலுமாக உருக்குலைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில், பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தை இந்தியா கடுமையாகத் தாக்கியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ஆயுதப் படைகள் ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்ததால், கடந்த மே 7ம் தேதியன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு அடுத்தடுத்த அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் மீது இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக தலைவர் மௌலானா மசூத் அசார் ஒப்புக்கொண்டார்.
பஹாவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி சுப்ஹான் அல்லா மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஜெய்ஷ் இ முகமது தலைவரின் மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், ஒரு மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் அஸாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமை நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதாக அறிவித்தன.
1999ம் ஆண்டு கடத்தப்பட்ட ஐசி-814 பயணிகளுக்கு ஈடாக அசார் விடுவிக்கப்பட்ட பிறகு, பஹவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் மையமாக மாறியது. அதன் பின்னர் மே 2019ல், ஜெ.இ.எம் தலைவரை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தின் மீதான பிடியை சீனா நீக்கியதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை அசாரை "உலகளாவிய பயங்கரவாதி" என்று அறிவித்தது. இந்த விவகாரத்தில் புது தில்லி முதல் முறையாக உலக அமைப்பை அணுகிய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இந்த திட்டம் கைவிடப்பட்டது.
நேற்று ஆற்றிய உரையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ஆயுதப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை நிறைவேற்றி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகளை "கற்பனை செய்ய முடியாத" துல்லியத்துடன் அழித்ததாகவும், இந்த பணியில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்த நடவடிக்கை குறைந்தபட்ச இணை சேதத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்றும், உயர்தர உபகரணங்களுடன் கூடிய "வலிமையான" மற்றும் "தொழில்முறை" பயிற்சி பெற்ற ஆயுதப் படைகளால் இது சாத்தியமானது என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
இந்திய ராணுவம், பாகிஸ்தானின் பொதுமக்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை என்றும், ஆனால் அந்த நாடு இந்தியாவில் உள்ள பொதுமக்கள் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்தது என்றும் அவர் கூறினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து பல தாக்குதல்களை நடத்தியதை உலகம் பார்த்திருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.