தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் இன்று மே 13ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியாகினர்.கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் புறவழிச்சாலையில் அசூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தந்தைக்கும் மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரத்தில் வசித்து வருபவர் நடேசன். இவரது மகன் சதீஷ்குமார் (45) தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா (40) இவர்களுக்கு ஸ்ரீராம் (17) அபி ஸ்ரீ( 15 )என்ற மகன், மகள் உள்ளனர்.சதீஷ் குமார் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். தஞ்சாவூரில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக அவர்களுக்கு சொந்தமான காரில் புறப்பட்டு சென்றனர்.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சத்யா பலத்த காயங்களுடன் பலியானார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஸ்ரீராம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்நிலையில், படுகாயமடைந்த சதீஷ்குமார் அவரது மகள் அபிஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.