இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட, நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாடு முழுவதும் 6 நகரங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை முதல் போட்டிகள் நடைபெறும் 6 நகரங்கள் எவை? ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் திரும்பி வருவார்களா?
பிசிசிஐ அறிக்கைஅரசு மற்றும் பாதுகாப்பு முகமைகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நடப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக பிசிசிஐயின் அறிக்கை கூறுகிறது.
எஞ்சிய 17 போட்டிகள் இந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும், மே 17ம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூன் 3 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான கால அட்டவணை கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளேஆஃப் சுற்றுக்கான போட்டிகளின் மைதானங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க உதவிய, இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்திற்கு வணக்கம் தெரிவிப்பதாகவும், கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்துவதோடு, தேச நலனில் உறுதியோடு இருப்பதாகவும் பிசிசிஐ கௌரவ செயலாளர் தேவஜித் ஷைகியா பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை முதல் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னௌ, ஆமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஜெய்ப்பூர் தவிர மற்ற அனைத்தும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ள அணிகளின் சொந்த மைதானங்களாகும்.
ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (ACA) தனது வீரர்களே அதுகுறித்து தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுக்குத் திரும்புவதா இல்லையா என்பது குறித்து வீரர்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளை ஆதரிப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஐபில் முடிந்ததும், ஒரு வாரம் கழித்து ஜூன் 11-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட சாத்தியமான கேப்டன் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 4 ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனாலும், மற்ற வெளிநாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இந்தியாவிலேயே உள்ளனர். லீக்கில் முன்னிலை வகிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் வார இறுதி நாட்களில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 இங்கிலாந்து வீரர்களில், 8 பேர் அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் (அதாவது இறுதிப்போட்டி வரையிலும்) முழுமையாக பங்கேற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அட்டவணைப்படி, ஐபிஎல் இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது.
அதேநேரத்தில், மே 29-ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று டி20 மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அணிக்கு திரும்புமாறு வீரர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்களா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
ஐபிஎல் ஒரு வாரம் ரத்தானதன் பின்னணிமுன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தால் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரின் குரூப் சுற்றின் 58வது போட்டியாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த மே 8ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்ஷாலாவில் நடைபெற்றது. பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த போட்டி பாதியில் கைவிடப்பட்டது.
போட்டியின் நடுவே சைரன் ஒலிக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு