காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்து கட்சிகளுமே தேர்தலில் போட்டியிடும் போது அதிக இடத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதேபோன்றுதான் காங்கிரஸ் கட்சிக்கும், வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். எங்களுடைய பலத்தை வைத்து தான் சீட்டு கேட்க முடியும்.
அதிக இடங்களை கேட்டு பெற விரும்புகிறோம் ஆனால் அதற்காக பலத்தை மீறி எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சியை தவிர்த்து விட்டு திராவிட கட்சிகள் மற்றும் அரசியல் செய்ய முடியாது. ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் இணைந்தால் தான் திராவிட கட்சிகளுக்கு வாக்கு வங்கி பலமாக இருக்கும் என்று தெரிவித்தார். இதற்கு முன்பு காங்கிரஸ் மட்டும் பிரதானமாக இருந்தது தற்போது பா-ஜனதாவும் இணைந்துள்ளது. இந்த 2 கட்சிகளையும் தவிர்த்து விட்டு மாநில கட்சிகள் மட்டும் கண்டிப்பாக அரசியல் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.