இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதன் அடிப்படையில் பல பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக விமானி சாமர்த்தியமாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் எந்த உயிர்ச்சேதமும் இல்லை.இது குறித்து இண்டிகோ விமான சேவை நிறுவனம் ''தில்லியில் இருந்து இன்று ஸ்ரீநகர் புறப்பட்ட 6E 2142 என்ற பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையில் சிக்கியது. விமானி மற்றும் குழுவினர், கொடுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி விமானத்தை ஸ்ரீநகரில் பத்திரமாகத் தரையிறக்கினர். தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்குப் பிறகு இது குறித்து முழுமையான அறிக்கை வெளியிடப்படும்'' என தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் இரவு ஆலங்கட்டி மழை பெய்தது. கீதா காலனி உட்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.