மோடியின் நரம்புகளில் ஓடுவது ரத்தமல்ல, சிந்தூர்: பிரதமர் மோடி ஆவேசம்!
Dhinasari Tamil May 23, 2025 01:48 AM

%name%

பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன்.  மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால், மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது என்று, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ‘ஆபரேஷன் சிந்தூரை’க் குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கே உள்ள புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலில்  வழிபாடு நடத்தினார். அதன் பின்னர், அம்மாநிலத்தின் பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தக் கோயிலுக்கு வந்தது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் ஆவேசமாகப் பேசினார். அதற்கு ஏற்ப, தனது நெற்றியில் குங்குமத் திலகமிட்டு, ஆபரேஷன் சிந்தூர் குறித்த அடையாளத்தையும் வெளிப்படுத்தினார். 

அந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது; பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது. பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். 3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். 

இந்தியாவுக்குச் சொந்தமான  தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று பேசினார். 

குறிப்பாக, இன்று கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்ற பிறகு நான் இங்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார். அவரது நெற்றியில் கோயிலில் வழங்கப்பட்ட குங்குமப் பிரசாதம் சிந்தூரின் அடையாளமாக இருந்தது. 

“இன்று, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் மக்களை வாழ்த்துகிறேன்” என்று பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் தனது பங்கினைக் குறிப்பிட்டு, நாடு வளர்ச்சியை நோக்கியே பயணப் படும் என்பதை தெளிவாக்கி, உடனே பாகிஸ்தான் எப்படி பயங்கரவாதப் பாதையில் சென்று, வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார். 

“பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான நேரடிப் போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்பதால், அது பயங்கரவாதத்தை நம் மீது தொடுக்கிறது. இந்தியாவுக்குச் சொந்தமான தண்ணீரை இனி  பாகிஸ்தானால் பெறமுடியாது.” என்றார். 

ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம். அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. 

“பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஒரே குரலில் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையை உறுதி செய்யவும் தீர்மானித்தனர். இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால்தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசு மூன்று படைகளுக்கும் கையைக் கட்டாமல் சுதந்திரம் கொடுத்தது. முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தது பாகிஸ்தானைச் சரணடையச் செய்தது. 

“மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை” “ நிமிர்த்தி நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படிப் பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும்.” என்று ஆவேசமாகப் பேசினார். 

ராஜஸ்தான் மாநிலம், பாகிஸ்தானுடன் எல்லையைக் கொண்டிருப்பதும், அது கடந்த காலங்களில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இலக்கான இடம் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.