வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 16 பேர்கொண்ட இந்த அணியில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பட்டாசு போல் வெடித்து ரன்களை குவித்த இளம் வீரர்களான 14 வயதுடைய வைபவ் சூரியவன்ஷி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்திற்கு ஆயுஷ் மாத்ரே கேப்டனாகவும், அபிக்யான் குண்டு துணை கேப்டனாகவும் பங்கேற்கிறார்கள்.
வைபவ் சூரியவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பக்கம், ஆயுஷ் மாத்ரே, காயம் அடைந்த ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் களம் இறங்கியவர். குறைந்த போட்டிகளிலேயே 6 ஆட்டங்களில் 206 ரன்கள் விளாசி, சிஎஸ்கே அணியில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். பெங்களூருவுக்கு எதிராக நடந்த போட்டியில் இவர் 94 ரன்கள் எடுத்தது கவனத்திற்கு உரியது.
இந்த சுற்றுப்பயணத்தில், இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிக்கான இந்தியா அண்டர் 19 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் முழு விவரங்கள்
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), அபிக்யான் குண்டு (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி, விகான் மல்ஹோத்திரா, மௌல்யராஜ்சிங் சாவடா, ராகுல் குமார், ஹெனில் பட்டேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, ஆர்.எஸ்.அம்பிரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் பட்டேல், முகம்மது இனான், அதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்
ஸ்டாண்ட்பை வீரர்கள்: நமன் புஷ்பக், விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (விக்கெட் கீப்பர்), டி. தீபேஷ், வேதாந்த் திரிவேதி.
ஜூன் 24 முதல் ஜூலை 23, 2025 வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.