இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை தவெக. உட்கார்ந்த இடத்தில் இருந்தே நான்கைந்து அறிக்கைகள், 1 பொதுக்கூட்டம், ரெண்டு ரோடு ஷோ, ஒரு மாநாடு. அதற்குள் உட்கட்சி பூசலால் தவெக சிதறுகிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கட்சிக்குள் இப்போதே மூவர் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. யாருக்கு யார் வேண்டப்பட்டவர் என்று லிஸ்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் விரக்தியில் எதிரணிக்கு வேலை செய்வார்கள் என்பதால், ரசிகர்கள் மன்றத்தினருக்கு தான் சீட் என்று ஆசை வார்த்தைக் கூறி வருகிறார் புஸ்ஸி ஆனந்த். ஆனால் தளபதியின் வியூக கணக்கு இது கிடையாது என்கிறார்கள்.
2026ல் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போது முதலே பணிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் தவெக அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் முடிந்ததும் முழுநேர அரசியல்வாதியாக மாறி விடுவதாக கூறியுள்ளார். அதற்குள்ளாகவே அடுக்கடுக்கான பஞ்சாயத்துகளால் திணறி வருகிறது பனையூர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 மாதங்களுக்கு ஒருமுறை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய், ஜனநாயகன் படப்பிடிப்பையும், அது தொடர்பான அனைத்து பணிகளையும் இன்னும் 2 மாதங்களுக்குள் முடித்து தன்னை முழுநேர அரசியலில் ஈடுபடுத்த உள்ளார். ஏற்கனவே கோவையில் பூத் கமிட்டி கூட்டத்தை முடித்த நிலையில் , எஞ்சிய மாவட்ட செயலாளர்களை நியமித்து ஜூலை 2வது வாரத்தில் திருச்சியில் தனது இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். இந்நிலையில் கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா விஜய்யை சந்தித்து பேச முடியாத சூழலில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புஸ்ஸி ஆனந்த், ஜெகதீஷ் பழனிசாமி, ஜான் ஆரோக்கியசாமி மூவரும் கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை முடிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தங்களை மீறி யாரும் விஜயை சந்திக்க கூடாது என்பதிலும் குறியாக இருப்பதாக தெரிகிறது. உட்கட்சி விபரம் அறிந்தவர்கள். ஆதவ் அர்ஜூனாவிற்கு தடைபோடும் அதே நேரத்தில், கட்சியின் பொருளாளராகவும் விஜயின் ஆடிட்டராகவும் பல ஆண்டுகளாக உடன் பயணிக்கும் வெங்கட்ராமனையும் ஓரம் கட்ட காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரஷாந்த் கிஷோரால் உருவாக்கப்பட்ட முன்னாள் ஐபேக் ஊழியர்களை கொண்ட Simple Sense என்ற நிறுவனம் TVK சமூக ஊடக பணிகளை செய்து வருகிறது. சென்னை கிண்டியில் இயங்கும் இந்த நிறுவனத்தில் சுமார் 50 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஊதியத்தை ஆதவ் அர்ஜுனா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது பிரஷாந்த் கிஷோருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இதில் ஆதவ் அர்ஜுனா 40 பேரை பணிநீக்கம் செய்துள்ளார். எஞ்சிய 10 பேரை தேனாம்பேட்டையில் உள்ள பிரஸ்டீஜ் கட்டிடத்தில் தொடங்கப்படும் TVK WAR Room பணிகளில் சேர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Simple Sense நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தங்களுக்கும் TVK WAR ROOM அலுவலகத்தில் வேலை வேண்டும் என கேட்க தொடங்கியுள்ளனர். நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு நேரில் சென்று முறையிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.