“திமுக பாட்டு வேணாம்... அம்பேத்கர் பாட்டு போடு...” உதயநிதி விழாவில் ரகளை!
Dinamaalai May 25, 2025 02:48 PM

புதுக்கோட்டையில் உதயநிதி கலந்துக் கொள்ள இருந்த விழாவில், மேடையில் திமுக பாடலைப் பாடகர் ஒருவர் பாட முயற்சித்த நிலையில், திமுக பாட்டு வேணாம்... அம்பேத்கர் பாட்டைப் பாடு” என்று விசிகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் உதயநிதியும், திருமாவும் வருவதற்கு முன்னதாக பாடகர் ஒருவர் திமுக பாடலை பாடத் துவங்கினார். 

உடனே விழாவைக் காண குழுமியிருந்த விசிகவினரும், அம்பேத்கர் மன்றத்தைச் சேர்ந்தவர்களும், அம்பேத்கர் நிகழ்வில் திமுக பாட்டு எதுக்கு? மேடையில் அம்பேத்கர் பாடலைத் தான் பாட வேண்டும் எனக் கூறி, பேரிகாடுகளை தள்ளிக் கொண்டு மேடையை நோக்கி சென்று, உடனே பாட்டை நிறுத்தச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கடைசி வரையில் அம்பேத்கர் பாடலைப் பாடாமல், பாடல் பாடும் நிகழ்ச்சியையே ரத்து செய்தது தனிக்கதை. 

அம்பேத்கர் குறித்து பாடத் தெரியாதவங்க அம்பேத்கர் சிலையைத் திறந்து பப்ளிசிட்டி தேடிக்கறாங்க என்று கூட்டம் கலைந்துப் போனது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.