சாலையில் நடந்துச் செல்லும் போது, ஐ லவ் யூ சொல்லி ஆபாசமாக வர்ணனைச் செய்து வந்த இளைஞனை, பொறுத்தது போதும் என்று ஒரு நாள் மாணவிகள் பொங்கியெழுந்து, நடுரோட்டிலேயே செருப்பால் அடித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் மாவட்டத்தில் சாதாபாத் நகரில், நடுரோட்டில் இரண்டு மாணவிகள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த மாணவிகளை பாலியல் ரீதியாக கிண்டல் செய்த ஒரு இளைஞர், அந்த மாணவிகளிடம் அதன் பிறகு ”ஐ லவ் யூ” எனக் கூறியுள்ளனர்.
இது தொடர்கதையாக நடந்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் வெகுண்டெழுந்த அந்த மாணவிகள் இருவரும், ஆத்திரமடைந்து அதே இடத்தில் நடுரோட்டில் அந்த இளைஞனின் தலைமுடியைப் பிடித்திழுத்து, செருப்பால் அடித்து, கடுமையாக தாக்குகின்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண்கள் இளைஞனை தாக்கும் போது அருகில் பொதுமக்கள் பலரும் இருந்த நிலையிலும், யாரும் அவர்களை கண்டுகொள்ளவோ தடுக்கவோ இல்லை. மாறாக “அந்த பெண்கள் சரியானதை தான் செய்கிறார்கள்” என கூறி கடந்து செல்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இது வரை போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்தப் பெண்களுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.