கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் முழுமையாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு அவசியமில்லமால் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் அதிகனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் 2 நாட்கள் மூடப்படுகிறது.
ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தவளைமலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ராட்சத பாறைகள் மரங்களின் இடுக்கில் சிக்கி உள்ளன. அவை எந்நேரமும் கீழே விழுந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு பேருந்துகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்லலாம். அதேபோல் அந்த சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வர தடை விதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் அனைத்து வாகனங்களும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அபாயத்தில் உள்ள ஊட்டி - கூடலூர் சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தி, ஆய்வு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.