இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
நியூ சண்டிகரில் இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி மோதி வருகின்றது.
புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று, 3வது இடம் பிடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதேபோல, 16 புள்ளிகள் பெற்று வலுவான ரன்ரேட்டுடன் 4வது இடத்தை மும்பை பிடித்ததால் இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் 2வது தகுதிச்சுற்றில் விளையாடும்.
மும்பை, குஜராத் அணிகள் இதுவரை 7 முறை மோதியுள்ளன. இதில் 2 முறை மட்டுமே மும்பை அணி வென்றுள்ளது. 5 முறை குஜராத் அணி வென்றிருப்பதால் குஜராத் அணியின் கைதான் ஓங்கி நிற்கிறது.
கடைசியாக மும்பை அணி 2023, மே 12ஆம் தேதி குஜராத் அணியை தோற்கடித்தது. அதன் பிறகு கடைசி 4 போட்டிகளிலும் குஜராத் அணியிடம் மும்பை தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிடும் ரோஹித், பேர்ஸ்டோமும்பையின் ரோஹித் சர்மா மற்றும் பேர்ஸ்டோ முதல் பேட்டிங்கை தொடங்கினர். முதல் ஓவரை சிராஜ் கட்டுக்கோப்பாக வீசியதால், 6 ரன்கள் மட்டுமே மும்பைக்கு கிடைத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ முதல் பவுண்டரியை அடிக்க, ரோஹித் சர்மா 5வது பந்தை பெரிய ஷாட்டுக்கு தூக்கி அடித்தார். லெக் திசையில் நின்றிருந்த கோட்ஸி அந்த கேட்சை பிடித்துத் தவறவிட்டார்.
சிராஜ் வீசிய 3வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை ரோஹித் விளாசினார். மிட்ஆஃப் திசையில் முதல் பவுண்டரியையும், மிட்ஆன் திசையில் 2வது பவுண்டரியையும் ரோஹித் விளாசினார். சிராஜ் வீசிய 4வது பந்தில் ரோஹித் பெரிய ஷாட்டுக்கு முயல, பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் மெண்டிஸ் பிடிக்காமல் தவறவிட்டார். ரோஹித் சர்மாவுக்கு 2வது கேட்ச்சை 3 ஓவருக்குள் குஜராத் அணியினர் தவறவிட்டனர்.
பிரசித் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோ, ஸ்குயர் லெக் திசையில் 95 மீட்டரில் பிரமாண்ட சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தில் அவர் அவுட்சைட் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு தூக்கிவிட்டார். 4வது பந்து பேர்ஸ்டோ பேட்டில் எட்ஜ் எடுத்து, சிக்ஸருக்கு பறந்தது. 5வது பந்திலும் மீண்டும் ஒரு சிக்ஸரை பேர்ஸ்டோ விளாசினார். கடைசி பந்திலும் பேர்ஸ்டோ பவுண்டரி அடிக்க 4வது ஓவரில் 26 ரன்களை பேர்ஸ்டோ சேர்த்தார்.
சிராஜ் வீசிய 5வது ஓவரில் பேர்ஸ்டோ, ரோஹித் சர்மா தலா ஒரு பவுண்டரி அடித்து 11 ரன்கள் சேர்த்தனர். 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்திருந்தது.
இருவரின் அதிரடி ஆட்டத்திற்கும் கடிவாளம் போடலாம் எனக் கருதி சாய் கிஷோரை பந்துவீச சுப்மன் கில் அழைத்தார். முதல் இரு பந்துகளுக்குத் திணறிய ரோஹித் சர்மா, பின்னர் ஸ்வீப் ஷாட்டில் ஸ்குயர் லெக் திசையில் சிக்ஸரும், ஸ்வீப் ஷாட்டில் அடுத்து 2 பவுண்டரிகளையும் விளாசி 14 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளேவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்தது.
ரஷித் கான் வீசிய 7வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தது மும்பை அணி. சாய் கிஷோர் வீசிய 8வது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த ஷாட்டை தாவிப் பிடிக்க பந்தை சுதர்சன் தட்டிவிட்டார். அந்தப் பந்தை கோட்ஸே பிடிக்கவே குஜராத்துக்கு முதல் விக்கெட் கிடைத்தது. பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரஷித் கான் முதல் ஓவரை சிறப்பாக வீசிய நிலையில் 2வது ஓவரை ரோஹித் சர்மா வெளுத்துவிட்டார். ரஷீத் வீசிய 9வது ஓவரில் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா, அடுத்த பந்தில் ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் 300வது சிக்ஸரையும், ஐபிஎல் தொடரில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோஹித் அடித்து மைல்கல்லை எட்டினார். 9வது ஓவர்கள் முடிவில் மும்பை அணி 101 ரன்களை எட்டியது.
சாய் கிஷோர் வீசிய 10வது ஓவரில் பவுண்டரி அடித்து ரோஹித் சர்மா 28 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். அந்த ஓவரின் கடைசி பந்திலும் பவுண்டரி அடித்து ரோஹித் சர்மா 12 ரன்களை சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்தது.
சாய் கிஷோர் வீசிய 12வது ஓவரில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் பந்துவீச அழைக்கப்பட்டார்.
அவரது முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே ரோஹித் சர்மா அடித்தார். 14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்திருந்தது. ரஷித் கான் வீசிய 15வது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸருடன் 10 ரன்களை சேர்த்து ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.
வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸிக்கு ஓவர்கள் தொடக்கத்தில் தரப்படாத நிலையில் டெத் ஓவரில் 16வது ஓவரை வீசினார். ரோஹித் சர்மா, திலக் வர்மா இருவரும் தலா ஒரு சிக்ஸர் விளாசி 15 ரன்களை சேர்த்தனர். கோட்ஸி வீசிய முதல் ஓவரிலும் சிக்ஸர் உள்பட 14 ரன்கள் சேர்க்கப்பட்டது.
பிரசித் கிருஷ்ணா வீசிய 17வது ஓவரில் ரோஹித் சர்மா மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை ரஷித் கான் கேட்ச் பிடிக்க 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா வந்தார்.
சிராஜ் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய திலக் வர்மா, அடுத்த பந்தில் விக்கெட் கீப்பர் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து நமன்திர் களமிறங்கினார். பிரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் 3வது பந்தில் சிக்ஸர் விளாசிய நமன் திர், அடுத்த பந்திலேயே ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கோட்ஸி வீசிய கடைசி ஓவரை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா, 2வது பந்தில் நேராக ஒரு சிக்ஸர், 4வது பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸர், 5வது பந்தில் லாங்ஆஃப் திசையில் சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன.
கோட்ஸி 3 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து விக்கெட்டின்றி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆரம்பத்திலேயே ரோஹித் சர்மா கேட்சை கோட்ஸி பிடித்திருந்தால் ஆட்டமே தலைகீழாக மாறியிருக்கும்.
இருபது ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் 22 ரன்களிலும், சான்ட்னரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
குஜராத் தரப்பில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறந்த ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தருக்கு ஏன் ஒரு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.
கோட்ஸி 3 ஓவர்கள் வீசி 51 ரன்களை வாரி வழங்கிய நிலையில் வாஷிங்டன் ஒரு ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஒரு ஓவரை வைத்து சுந்தருக்கு தொடர்ந்து தராமல் கில் மறுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் சேர்ந்து 11 ஓவர்கள் வீசி 141 ரன்கள் வழங்கி 3 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்கள் 3 பேர் 9 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். கோட்ஸிக்கு டெத் ஓவரில் வழங்கப்பட்ட ஓவருக்கு பதிலாக நடுப்பகுதியில் வாஷிங்டன் சுந்தரை பந்துவீசச் செய்திருக்கலாம் என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.
குஜராத் அணி, 229 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர்.
ஆனால், சுப்மன் கில் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கால்காப்பில் வாங்கி 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அடுத்து குசால் மெண்டிஸ் களமிறங்கினார். பும்ரா கட்டுக்கோப்பாகப் பந்து வீசியதால், நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்தது குஜராத் அணி.
போல்ட் வீசிய 3வது ஓவரில் சுதர்சன் ஒரு சிக்ஸரையும், மெண்டிஸ் இரு சிக்ஸர்களையும் வெளுத்து 21 ரன்கள் சேர்த்தனர். கிளீசன் வீசிய 4வது ஓவரில் சுதர்சன் இரு அருமையான பவுண்டரிகளை அடித்து 11 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் சீசனில் 700 ரன்களை சுதர்சன் சேர்த்தார்.
ஹர்திக் வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 2 பவுண்டரிகளும், குசால் ஒரு பவுண்டரியும் அடித்தனர். 4.4 ஓவர்களில் குஜராத் அணி 50 ரன்களை தொட்டது. 5 ஓவர்களில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தது.
இந்தச் செய்தி புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள பிபிசி தமிழின் இந்த பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு