ஈலோன் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவது ஏன்?
BBC Tamil May 31, 2025 02:48 AM
Getty Images

அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் தனது நேரம் "முடிவுக்கு வருகிறது" என்று கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடக தளத்தில், டோஜ் (DOGE) என்று அழைக்கப்படும் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மஸ்க் ஒரு "சிறப்பு அரசாங்க ஊழியர்" ஆக நியமிக்கப்பட்டிருந்தார்- ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைகிறது.

டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும்.

"ஒரு சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக் காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைக்க வாய்ப்பளித்த அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் எழுதினார்.

"DOGE பணி காலப்போக்கில் வலுப்பெறும், ஏனெனில் இது அரசாங்கம் முழுவதுமான ஒரு வழக்கமாக மாறும்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் மசோதா மீது மஸ்க் அதிருப்தி

வெள்ளை மாளிகை புதன்கிழமை இரவு ஈலோன் மஸ்க்கை சிறப்பு அரசு ஊழியர் பொறுப்பிலிருந்து விலக்கும் பணிகளை தொடங்கும் என்று பிபிசி நம்புகிறது.

பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் "ஏமாற்றம்" அடைந்ததாக அண்மையில் கூறியிருந்த நிலையில் மஸ்கின் வெளியேற்றம் நடக்கிறது.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா உரிமையாளரான மஸ்க் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளி சிபிஎஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், "இந்த மசோதா அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும்" என்றார். இது தன்னால் வழிநடத்தப்படும் டோஜ் துறையால் செய்யப்படும் "வேலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று அவர் நினைத்தார்.

Getty Images

குடியரசுக் கட்சியின் மெகா நன்கொடையாளரான மஸ்க், குழப்பம் நிறைந்த நிலையற்ற அரசியல் ஈடுபாட்டில் இருந்து விலகுகிறார். இந்த அரசியல் நுழைவு தான் அவரை டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக மாற்றியது. அதேநேரத்தில் அவரது டெஸ்லா மின்சார கார் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது.

டெஸ்லா சமீபத்தில் இதே நிலைமை தொடரக்கூடும் என்று முதலீட்டாளர்களை எச்சரித்தது. வளர்ச்சிக்கான கணிப்பை வழங்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

ஈலோன் மஸ்க் கடந்த மாதம் முதலீட்டாளர்களிடம் டோஜுக்கு ஒதுக்கும் நேரம் "கணிசமாகக் குறையும்" என்றும், "எனது அதிக நேரத்தை டெஸ்லாவுக்கு ஒதுக்குவேன்" என்றும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.