ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது பெங்களூரு அணி
Top Tamil News May 30, 2025 06:48 AM

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பெங்களூர் அணி பந்துவீச்சாளர்கள் ஜோஷ் ஹேஸல்வுட் மற்றும் யாஷ் தயால் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர், புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். சுழற்பந்துவீச்சாளர் சுயஷ் சர்மா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை சீர்குலைத்தார். மொத்தமாக, பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

102 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், விராட் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மற்றொரு முனையில் சால்ட் 23 பந்துகளில் அரை சதம் அடித்து அணியை முன்னேற்றினார். 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்த பெங்களூர் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், பெங்களூர் அணி ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

தோல்வி கண்ட பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகளில் வெற்றிபெறும் அணியுடன் பஞ்சாப் மோதும். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதியில் பெங்களூர் அணியை சந்திக்க வாய்ப்பு பெறும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.