நியூ சண்டிகரில் இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி மோதி வருகின்றது.
புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று, 3வது இடம் பிடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதேபோல, 16 புள்ளிகள் பெற்று வலுவான ரன்ரேட்டுடன் 4வது இடத்தை மும்பை பிடித்ததால் இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் 2வது தகுதிச்சுற்றில் விளையாடும்.
மும்பை, குஜராத் அணிகள் இதுவரை 7 முறை மோதியுள்ளன. இதில் 2 முறை மட்டுமே மும்பை அணி வென்றுள்ளது. 5 முறை குஜராத் அணி வென்றிருப்பதால் குஜராத் அணியின் கைதான் ஓங்கி நிற்கிறது.
கடைசியாக மும்பை அணி 2023, மே 12ஆம் தேதி குஜராத் அணியை தோற்கடித்தது. அதன் பிறகு கடைசி 4 போட்டிகளிலும் குஜராத் அணியிடம் மும்பை தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிடும் ரோஹித், பேர்ஸ்டோமும்பையின் ரோஹித் சர்மா மற்றும் பேர்ஸ்டோ முதல் பேட்டிங்கை தொடங்கினர். முதல் ஓவரை சிராஜ் கட்டுக்கோப்பாக வீசியதால், 6 ரன்கள் மட்டுமே மும்பைக்கு கிடைத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ முதல் பவுண்டரியை அடிக்க, ரோஹித் சர்மா 5வது பந்தை பெரிய ஷாட்டுக்கு தூக்கி அடித்தார். லெக் திசையில் நின்றிருந்த கோட்ஸி அந்த கேட்சை பிடித்துத் தவறவிட்டார்.
சிராஜ் வீசிய 3வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை ரோஹித் விளாசினார். மிட்ஆஃப் திசையில் முதல் பவுண்டரியையும், மிட்ஆன் திசையில் 2வது பவுண்டரியையும் ரோஹித் விளாசினார். சிராஜ் வீசிய 4வது பந்தில் ரோஹித் பெரிய ஷாட்டுக்கு முயல, பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் மெண்டிஸ் பிடிக்காமல் தவறவிட்டார். ரோஹித் சர்மாவுக்கு 2வது கேட்ச்சை 3 ஓவருக்குள் குஜராத் அணியினர் தவறவிட்டனர்.
பிரசித் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோ, ஸ்குயர் லெக் திசையில் 95 மீட்டரில் பிரமாண்ட சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தில் அவர் அவுட்சைட் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு தூக்கிவிட்டார். 4வது பந்து பேர்ஸ்டோ பேட்டில் எட்ஜ் எடுத்து, சிக்ஸருக்கு பறந்தது. 5வது பந்திலும் மீண்டும் ஒரு சிக்ஸரை பேர்ஸ்டோ விளாசினார். கடைசி பந்திலும் பேர்ஸ்டோ பவுண்டரி அடிக்க 4வது ஓவரில் 26 ரன்களை பேர்ஸ்டோ சேர்த்தார்.
சிராஜ் வீசிய 5வது ஓவரில் பேர்ஸ்டோ, ரோஹித் சர்மா தலா ஒரு பவுண்டரி அடித்து 11 ரன்கள் சேர்த்தனர். 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்திருந்தது.
மும்பை அணியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரெக்கிள்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடச் சென்றதால் அவருக்குப் பதிலாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டர் பேர்ஸ்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஃபார்மின்றி பேர்ஸ்டோ இருந்தாலும், களத்தில் நின்றுவிட்டால் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடும் அதிரடியான பேட்டர். அதேபோல இலங்கை வீரர் அசலங்காவும் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வீரர்கள் பலர் இல்லையென்றாலும், மும்பையின் வலிமை குறையாமல் இருக்கிறது.
குஜராத் அணியில்தான் முக்கியத் தூணான ஜோஸ் பட்லர் இல்லாமல் களமிறங்குவது பேட்டிங்கில் பலவீனத்தை காண்பிக்கிறது. அதேபோல பந்துவீச்சில் ரபாடா இல்லாததும், ரஷித் கானின் மோசமான ஃபார்ம் ஆகியவை குஜராத் அணிக்கு சவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதைக் கடந்து குஜராத் அணி வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் புதிதாக பேர்ஸ்டோ, ராஜ் பாவா, ரிச்சர்ட் கிளீசன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல குஜராத் அணியில் பட்லருக்கு பதிலாக இலங்கை வீரர் குசால் மெண்டிஸும், அர்ஷத் கானுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள பிபிசி தமிழின் இந்த பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு