பவானியில் வாடகைக்கு வீடு கேட்டு வந்த தம்பதி, மூதாட்டியை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியில் சேர்ந்தவர் 75 வயதான மூதாட்டி பாப்பாத்தி. இவர் தான் குடியிருக்கும் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டை வாடகைக்கு விடுவதாக தகவல் அறிந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் , பாரதி நகர் பகுதியில் சேர்ந்த சிவா என்கிற சிவராஜ் (35) மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்த கோமதி ( 32) ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டதாக கூறி மூதாட்டியின் வீட்டில் வாடகைக்கு கேட்டு கடந்த 25ஆம் தேதி வந்து உள்ளனர். மேலும் மூதாட்டி வீட்டை வாடகைக்கு விடுவதாக ஒப்புக்கொண்ட நிலையில் முன் பணமாக ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் அன்று செலுத்தி விட்டு சென்ற தம்பதி மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மூதாட்டி இந்த தம்பதி மீது போதிய நம்பிக்கை இல்லாததால் வீடு வாடகைக்கு விட மாட்டேன், நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். மேலும் மூதாட்டி ஆயிரம் ரூபாய் பணத்தில் 700 ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். பாக்கி 300 ரூபாய் பணம் தர மறுத்ததாக கூறப்படும் நிலையில், சிவராஜ் , மூதாட்டி வீடு வாடகைக்கு விடமாட்டேன் எனக் கூறியதோடு கொடுத்த பணத்திலும் 300 ரூபாய் தர மறுத்ததாக கூறி ஆத்திரத்தில் மூதாட்டியை எட்டி உதைத்து கீழே தள்ளி உள்ளார். இதில் மூதாட்டி தலை, கழுத்து, பகுதியில் காயமடைந்து வலியில் துடித்துள்ளார். மேலும் தம்பதியினர் 300 ரூபாய் பணத்திற்காக மூதாட்டியின் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரம் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மூதாட்டி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், மூதாட்டியை தாக்கிய சிவராஜ் மற்றும் அவரது மனைவின் மீது வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் தப்பி ஓடிய தம்பதியை தனிப்படை அமைத்து கடந்த மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் இன்று திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.