இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார். 'மதயானைக்கூட்டம்', 'இராவணக்கோட்டம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் மறைவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். 2013-ம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, சாந்தனுவை கதாநாயகனாக வைத்து 2023-ம் ஆண்டு 'இராவணக்கோட்டம்' படத்தை இயக்கியிருந்தார் விக்ரம்.
இதைத் தாண்டி, வெற்றிமாறனின் 'ஆடுகளம்' திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு, சசிகுமாருடன் 'கொடிவீரன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் சுகுமாரன்.
விக்ரம் சுகுமாரன் உயிரிழந்த தகவலைப் பகிர்ந்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷாந்தனு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "உங்களிடமிருந்து பலவற்றைக் கற்றிருக்கிறேன்.
அந்தத் தருணங்களெல்லாம் என்றும் என் நினைவில் இருக்கும். சீக்கிரமாக எங்களை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள்," எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.