தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே நரியூத்து கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (44), ஓட்டலில் பணியாற்றி வருபவர். அவரது மனைவி மீனா (36). இவர்களுக்கு அக்சயா (8) மற்றும் அபிநயா (4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவிக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் ஏற்பட்ட சண்டை பெரும் துயரத்திற்கு வழிவகுத்துள்ளது.
சண்டையின் போது, மாரிமுத்து வீட்டில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி, மனைவியிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என மிரட்டினார். அடுத்த கட்டமாக, தீக்குச்சி எடுத்து பற்றவைத்த போது, பெட்ரோல் உடலில் பரவியிருந்ததால் தீப்பற்றியது. அவரை காப்பாற்ற மீனாவும் ஓடினார். அந்த நேரத்தில் தீ இருவரும் மட்டுமின்றி 2 குழந்தைகள் மீதும் பரவியது.
தீப்பற்றிய 4 பேரும் அலறியதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து, தீயை அணைத்து அவர்களை உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தற்போது மாரிமுத்து 80% தீக்காயங்களுடன், மீனா 60% தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் நிலைமையில் இருக்கிறார்கள். அக்சயா, அபிநயாவும் காயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.