இனி கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் அதாவது குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. இது வங்கிகளுக்கு ஏற்ப ரூ.500, ரூ.1000 முதல் ரூ.5000, ரூ.10,000 மாறுபடும். இது பெரும்பாலானவர்களுக்கு கஷ்டமான விதியாக இருந்து வந்தது. அவசர கால தேவைகளுக்கு அந்தத் தொகையை பயன்படுத்த முடியவில்லையே என பலரும் கவலை கொள்வதுண்டு. அப்படி ஏதேனும் சூழலில் அந்தத்தொகையை பயன்படுத்திவிட்டாலும், பின்னர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்போது அபராதமாக கூடுதல் தொகை பிடித்தம் செய்யப்படும்.
இந்த நிலையில் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, தங்களது வங்கியில் சேமிப்புக் கணக்குகள் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனி குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் நடைமுறை வரும் என்றும் தெரிவித்துள்ளது. சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராதமும் இன்று முதல் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு வழக்கமான சேமிப்பு கணக்குகள், சம்பளம் பெறுவோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் பொருந்தும் என்பதால், கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.